பாஜகவின் வெற்றி 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி!

பாஜகவின் வெற்றி 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையால் 3வது முறை வெற்றி பெற்றுள்ளோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. 400 இடங்களை வெல்வோம் என்ற கோஷத்துடன் பிரசாரத்தை தொடங்கிய பாஜகவிற்கு இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளன. தனி மெஜாரிட்டி பெற முடியாமல் கூட்டணி ஆட்சியை தான் அமைக்க முடியும் சூழலில் உள்ளது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டெல்லியில் பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

பாஜகவின் வெற்றி 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி. பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்தற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவே தற்போது 3வது முறை வெற்றி பெற்றுள்ளோம். மோடியின் மீதும் மோடியின் திட்டங்கள் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். 2019 இல் மக்கள் பாஜக மீது வைத்த நம்பிக்கையை 2024 ஆம் ஆண்டில் நாங்கள் நிரூபித்து இருக்கிறோம். குஜராத், இமாச்சல் பிரதேசம், டெல்லி மக்கள் எங்களை முழுவதும் நம்பியுள்ளனர். கேரளாவிலும் மக்கள் எங்களை நம்ப தொடங்கியுள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளது எங்களை பெருமை அடைய செய்கிறது. மூன்றாவது முறையாக எந்த கட்சிக்கும் இத்தனை இடங்கள் கிடைத்ததில்லை. கொரோனா காலத்திலும் வீழ்ச்சியையும் அதன் பிறகு வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக 400 இடங்களை வெல்வோம் என்ற கோஷத்துடன் பிரசாரத்தை தொடங்கிய பாஜகவிற்கு லோக்சபா தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தனி மெஜாரிட்டி பெற முடியாமல் கூட்டணி ஆட்சியையே பாஜக இந்த முறை அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. மறுபக்கம் இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளன. இதேபோல், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது.