40ல் வென்று ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளோம்: தமிழச்சி தங்கப்பாண்டியன்!

திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று தமிழிசை செளந்தரராஜன் கூறிய கருத்துக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. தென்னிந்தியாவில் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கேரளாவில் பாஜக குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை. பாஜக தனி பெரும்பான்மை பெற முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இருந்தாலும் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் என்டிஏ கூட்டணி ஆட்சிமைக்கவுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று எந்த பலனும் இல்லை. இதனால் கவலை கொள்வதாக தெரிவித்திருந்தார்.

தமிழிசை செளந்தரராஜனின் கருத்துக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியுள்ளதாவது:-

திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. அப்படியில்லை.. தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்போது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கி இருக்கிறார். ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை. அடங்கி அரவணைத்து செல்வது என்பதை 10 ஆண்டுகளுக்கு பின் பாஜக உணர தொடங்கியிருக்கும். தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையில் இருந்து இறங்கி வந்திருக்கும். இனி பாஜக அசைக்க முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்தில் மக்களே அதிகாரமிக்கவர்கள். தனி மனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்த தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தி இருக்கிறது. ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம். தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கிறது. மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது. அதனால் தான் இதன் பெயர் நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.