தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித்ஷா!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவின் போது தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது.

தமிழ்நாட்டில் அண்ணாமலை – தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன். ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?. இன்னொன்று நாங்கள் எல்லாம் இரண்டாம் இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம். அதிமுக – பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். எனக்கு கருத்து இருந்தால் நான் சொல்வேன். நான் மாநில தலைவரை எதிர்க்கிறேன் என்று சொல்ல மாட்டேன். கூட்டணி அமைத்தால் வென்று இருப்போம் என்று கூறுகிறேன். அவ்வளவுதான், என்றுள்ளார். ப

இந்த நிலையில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா சூசகமாக பதில் அளித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை – முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா, பாஜககாரர்களாகிய நாங்கள் ஏற்கனவே தமிழகத்தில் சீட் கிடைக்காததால் சோகமாக உள்ளோம். பாஜக அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநிலத் தலைவர்தான் மாநிலப் பிரிவின் உச்ச முடிவெடுப்பவர். அவர்தான் முடிவுகளை எடுக்க கூடியவர். மூத்தவர்கள் முதல் ஜூனியர்கள் வரை மாறுப்பட்ட கருத்துக்களை கொண்ட எவரும் மீடியா மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது டிவி ஸ்டுடியோக்களிலும் பிற இடங்களிலும் மிகவும் சங்கடமாக உள்ளது. அவர்கள் இதை தவிர்த்து கட்சிக்கு உள்ளே நடக்கும் மீட்டிங்குகளில் இதை பேச வேண்டும். அண்ணாமலை கடந்த 3 வருடங்களில் எங்களுக்கு மரியாதையும் கண்ணியமும் அளித்து, நல்ல அரசியல் தலைவர்களாக எங்களை வளர்த்தெடுத்தார் . அதில் எதையும் இழக்க விரும்பவில்லை. தமிழகம் முழுவதும் 19 இடங்களில் 11% வாக்குகளும். போட்டியிட்ட இடங்களில் மொத்தமாக 20% வாக்குகளும் பெற்றுள்ளோம்.. இங்கு ஆட்சிக்கு வருவதற்காக எங்கள் கட்சியை பன்மடங்கு வலுவாக வேண்டும். அதற்காக பணிகளை கட்டமைக்க விரும்புகிறோம்., என்று எஸ்ஜி சூர்யா கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவின் போது தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. தமிழிசையை அழைத்து கண்டிப்பது போல கையால் சைகையை காட்டுகிறார். இதற்கு தமிழிசை பதில் அளிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல் தமிழிசையை கண்டிக்கும் விதமாக அமித் ஷா மறுத்து பேசுகிறார்.

இந்த வீடியோ தொடர்பாக தற்போது திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுக செய்தித்தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை செய்துள்ள போஸ்டில், இது என்ன வகையான அரசியலோ? தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான பெண் அரசியல்வாதியை மேடையில் வைத்து கடுமையான சொற்களையோ மிரட்டும் உடல் மொழியையோ வெளிப்படுத்துவது நாகரீகமா? எல்லோரும் இதனை பார்ப்பார்கள், என்பதை அறியாதவரா அமித் ஷா? மிக தவறான முன்னுதாரணம்!, என்று விமர்சனம் செய்துள்ளார்.