‘தேவைப்பட்டால்’ போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா கைது: அமைச்சர் பரமேஸ்வரா!

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தேவைப்பட்டால் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவருக்கு வயது 80. எடியூரப்பா மீது பெங்களூர் சதாசிவநகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் நேரத்தில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தம்மிடம் உதவி கேட்டு வந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார் எடியூரப்பா என்பது புகார். இந்த வழக்கை கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார்- சிஐடி விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் எடியூரப்பா மீது பலாத்கார புகார் கொடுத்த சிறுமியின் தாய் திடீரென இறந்தார். நுரையீரல் புற்று நோய் காரணமாக அந்த தாய் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே தம் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தம் மீது பொய்யான புகார் தரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படியான பல பொய் புகார்கள் என் மீது கூறப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்கும் ஆஜரானேன். ஆனால் என்னிடம் விசாரணை நடத்தவில்லை. என் குரல் மாதிரியை மட்டும் சேகரித்துவிட்டு அனுப்பினர். ஆகையால் இந்த பொய் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் எடியூரப்பா கோரியிருந்தார். ஆனால் போக்சோ வழக்கின் கீழ் எடியூரப்பாவை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் திடீரென கர்நடகா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் எடியூரப்பாவை விசாரணைக்கு வர அழைத்து சம்மன் அனுப்பியது சிஐடி. ஆனால் தாம் ஜூன் 17-ந் தேதிதான் விசாரணைக்கு வர முடியும் என எடியூரப்பா பதில் தெரிவித்திருந்தார். இதனால் போக்சோ வழக்கில் எடியூரப்பா கைது செய்யப்படக் கூடும் என்கிற தகவல் பரவ பெரும் பரபரப்பானது.

இந்த நிலையில் தமக்கு முன் ஜாமீன் கோரி எடியூரப்பா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “தேவைப்பட்டால்” போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா கைது செய்யப்படுவார். ஏற்கனவே சிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்” என தெரிவித்திருக்கிறார். இதனால் கர்நாடகா அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.