தொலைபேசி ஓட்டு கேட்பு வழக்கில் பதிலளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவு!

தொலைபேசி ஓட்டு கேட்பு ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் விடுதலை செய்யபட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடு வழக்கில் நான்கு வாரத்தில் பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் (டி.வி.ஏ.சி) அலுவலகத்தின் ரகசிய பிரிவில் சிறப்பு உதவியாளராக கடந்த 2008 ஆண்டு பணியாற்றிய சவுக்கு சங்கர் அங்கு இருந்த சில உரையாடல்களை திருடி வெளியிட்டதாக சென்னை சிபிசிஐடி காவல் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் காவல்துறை தரப்பில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதால் சங்கரை விடுதலை செய்து கடந்த 2017 ஆண்டு பிப்ரவரி 24 தீர்ப்பளித்தது. சென்னை அமர்வு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சிபிசிஐடி காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் விசாரணை நீதிமன்றம் அரசு தரப்பு சாட்சிகளை முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் உரையாடல்களை பதிவு செய்த பென் டிரைவ் சவுக்கு சங்கர் உடையது அதில் சில ரகசியங்களை திருடி வெளியிட்டது அவர்தான். விசாரணை நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளாமல் விடுதலை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விடுதலை ரத்து செய்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரியுள்ளது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. மனு குறித்து நான்கு வாரங்களில் பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளி வைத்தார்.