எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு!

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு குடுத்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிஐடி தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கூறி உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பெங்களூரு சதாசிவம் நகரில் வசித்துவரும் பெண் தனது 17 வயது மகளை முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கூறி கடந்த மார்ச் 14-ம் தேதி சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். புகார் அளித்த பெண் ஏற்கனவே காவல்துறை, அரசியல்வாதிகள் என 57 முக்கிய பெரும்புள்ளிகள் மீது பாலியல் புகார் அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே புகார் அளித்த பெண் புற்றுநோயால் அவதிபட்டு வந்த நிலையில் கடந்த மே மாதம் 27-ம் தேதி சிகிச்சைபலனின்றி மருத்துவமனையில் அவ்கர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் ஏற்கனவே புகார் கொடுத்து இதுவரை எடியூரப்பா கைது செய்யப்படவில்லை என சிறுமியின் சகோதரர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி சிஐடி விசாரணைக்கு எடியூரப்பா ஆஜராகியிருக்க வேண்டும் ஆனால் அவர் கடந்த 11-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

இதனால் அவர் சிஐடி விசாரணைக்கு 17-ம் தேதி ஆஜராகவுள்ளதாகவும் அதுவரை அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கடிதம் எழுதியிருந்தார். இந்த சூழலில் இன்று பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் 1-ல் எடியூரப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமின் பெறமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து எந்த நேரத்திலும் எடியூரப்பா கைது செய்யப்படகூடிய சூழல் நிலவுகிறது.