கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து: மு.க.ஸ்டாலின்!

மாணவர்கள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “படிங்க.. படிங்க.. படிச்சுக்கிட்டே இருங்க.. எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருங்க.. உங்கள் கண்முன்னால் “ஃபுல் ஸ்டாப்” தெரியக் கூடாது. ‘கமா’ தான் தெரியவேண்டும்” எனப் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இன்று மாணவர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு முன்பு மாணவர்களுக்காக நம்முடைய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, பள்ளிக் கல்வித் துறையில் இருந்து ஒரு பெரிய பட்டியலே வந்தது. அதில் மிக முக்கியமான சில திட்டங்களின் பெயரை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் “காலை உணவுத் திட்டம்”, 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் “இல்லம் தேடிக் கல்வி”, 28 லட்சம் மாணவர்களுக்கு திறன்பயிற்சி வழங்கி வரும் “நான் முதல்வன்”, 23 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் “எண்ணும் எழுத்தும் திட்டம்” என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை மட்டுமா? 30 லட்சம் மாணவர்கள் பயனடையும் “வாசிப்பு இயக்கம்”, “மாணவர் மனசு” என்ற பெயரில் “ஆலோசனைப் பெட்டி”, 23 லட்சம் பெற்றோர்களை உள்ளடக்கிய “பள்ளி மேலாண்மைக் குழுக்கள்”, அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக “நம்ம ஸ்கூல்- நம்ம ஊரு பள்ளி” திட்டம், “நடமாடும் அறிவியல் ஆய்வகம்”, “வானவில் மன்றம்”, மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டம், தகைசால் பள்ளிகள், மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள், மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் “கல்விச் சுற்றுலா திட்டம்”, பள்ளி செல்லாத பிள்ளைகளைக் கண்டறிய “செயலி”, சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு “சிறப்பு நிதி” இப்படி நிறைய இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குகிற மற்றொரு முக்கியமான திட்டம் இருக்கிறது! அதுதான் “புதுமைப்பெண் திட்டம்”. எனக்கு மாணவிகளிடம் இருந்து வந்த கடிதங்களாக இருந்தாலும், இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் சந்தித்த மாணவிகளாக இருந்தாலும், பலரும் இந்த “புதுமைப்பெண்” திட்டத்தை மிகவும் பாராட்டிப் பேசினார்கள். மாணவிகள் தங்களின் சிறிய சிறிய தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை என்றும், இந்த திட்டத்தில் மாதா மாதம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் தங்களின் தேவைக்கு உதவியாக இருப்பதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற “தமிழ்ப்புதல்வன் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் கல்லூரி சென்றவுடனே வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்த மேடையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட இருக்கிறது. வகுப்பறையை குழந்தைகள் மனதிற்குப் பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, அங்கு ஸ்மார்ட் போர்டு ஒன்றைப் பொருத்தப் போகிறோம். இங்கு இணையதள வசதியும் இருக்கும். முதற்கட்டமாக, 500 ஸ்மார்ட் வகுப்பறைகளை இன்றைக்கு துவக்கி வைத்திருக்கிறேன். இது எல்லாமே உங்களுக்காகத்தான்.

என்னுடைய ஆசையெல்லாம், உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும், என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும். அதுதான் என் கனவு. அதற்காகதான் இந்தத் துறையில் நிறைய திட்டங்களைக் கொண்டு வருகிறோம். நிதி நெருக்கடி எத்தனை இருந்தாலும், கல்வித்துறையில் நிறைய புதுப்புதுத் திட்டங்களை தொடங்குகிறோம் என்றால், உங்களுக்காகத்தான். மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். பதிலுக்கு, மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்.. படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கண்முன்னால் “ஃபுல் ஸ்டாப்” தெரியக் கூடாது. ‘கமா’ தான் தெரியவேண்டும். கீப் ரன்னிங். கீப் வின்னிங். கீப் ஷைனிங். Make Tamil Nadu proud!

கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஆனால், அதிலும் கூட, மோசடிகள் செய்வதை “நீட்” போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம். அதனால்தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். “நீட்” போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழ்நாடுதான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு. மாணவச் செல்வங்களான நீங்கள் படிக்க சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவுமே தடையாக இருக்கக் கூடாது. அதுதான் என்னுடைய எண்ணம். அதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை! கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்! அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்கவேண்டும். “படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம்” என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துகொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.