கனிம வளங்களை கொள்ளையும் அடிப்பீங்க.. ஆட்களையும் கொல்வீங்களா: சீமான் கண்டனம்!

தென்காசியில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி 4 பேர் உயிரிழந்த நிலையில், இச்சம்பத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசைப் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரி மோதி, ஒரு குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ள செய்தி பெரும் மனத்துயர் அளிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, லாரி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனிமவளக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அவற்றை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களின் விதிமீறல்களும அதிக அளவில் நடந்து வருகின்றன. குமரி மாவட்டத்திலும் இதுபோன்ற பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு தென்காசியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை புறந்தள்ளியும் கனிம வளங்களை கடத்தி வரும் இந்த வாகனங்களையும், கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் முதலாளிகளையும் எந்தவித நடவடிக்கைக்கும் உட்படுத்தாமல், அரசு வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் எந்தவித வளக்கொள்ளையும் நடைபெறக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், நடைமுறையில் இருக்கக்கூடிய விதிமுறைகளை கூட சரிவர செயல்படுத்தாதது அரசின் ஆட்சி திறமை இன்மையே காட்டுகிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு சரக்கு லாரிகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சீமான் வலியுறுத்தியுள்ளார்.