மணல் கடத்தலை தடுத்த கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

புதுக்கோட்டை – இலுப்பூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற கொடுமை அரங்கேறியுள்ளது. இதை தடுக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திமுக ஆட்சி வந்தாலே – மணல் கடத்தல், கிராவல் மண் போன்ற கனிம வளங்கள் கடத்தல், மரம் வெட்டுதல் போன்ற பொது சொத்துக்கள் களவாடப்படுவது வாடிக்கையான ஒன்று. தமிழகத்தில் மணல் கடத்துபவர்கள் பற்றி துப்புக் கொடுப்பவர்களையும், மணல் கடத்தலை தடுக்கும் வருவாய் மற்றும் காவல்துறையினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

ஏற்கனவே ஏப்ரல், 2023ல் தூத்துக்குடி மாவட்டம் மொரப்பாநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து ப்ரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்டார். தூத்துக்குடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை ஆளும்கட்சி நிர்வாக ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகியது. தமிழகம் முழுவதும் இதுபோல் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதும், இந்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. இதன் உச்சமாக இரு தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை – இலுப்பூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற கொடுமை அரங்கேறியுள்ளது. இதை தடுக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசு, இதுபோன்ற செய்திகளை மக்கள் வெளிச்சத்திற்கு வராதபடி தடுப்பதில் முனைப்பு காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.