கடலில் மூழ்கி பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் கடலில் மூழ்கி பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த IND-TN-11-MM-110 என்ற பதிவெண் கொண்ட இயந்திர மீன்பிடி படகில் கடந்த 15.6.2024 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மீன்பிடி படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதால், மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களில் இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ஊராட்சி, அன்னை நகரைச் சேர்ந்த ஆரோக்கியம் (வயது 50) த/பெ.ஜெபமாலை, பரக்கத்துல்லா (வயது 45) த/பெ. ஐனிசை மற்றும் கலீல் முஹம்மது (வயது 32) த/பெ. செய்யது முஹம்மது புஹாரி ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.