குறுவை தொகுப்பு திட்டம் குறித்து தவறான தகவல்களை சொல்கிறார் இபிஎஸ்: எம்ஆர்கே பன்னீர்செல்வம்!

குறுவை தொகுப்பு திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தவறான தகவல்களை சொல்லி வருகிறார் என்று வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 16-ம் தேதி அன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் டெல்டா விவசாயிகளின் குறுவைத் தொகுப்பு அறிவிப்பு மக்களை ஏமாற்றும் நாடகங்களில் ஒன்று எனவும் அதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். உண்மைகளை மறைத்து யாரோ எழுதிகொடுப்பதை கையெழுத்திட்டு அறிக்கையாக வெளியிடும் எதிர்கட்சி தலைவருக்கு பின்வரும் விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மழை இல்லாத காலங்களில் குறுவை தொகுப்பானது எந்த அளவுகோலை பின்பற்றி விவசாயிகளின் தேவைக்கு வழங்கப்பட்டதோ, அதைவிட கூடுதலாக, சிறப்பாக திமுக அரசால் 16 மணிநேரம் மும்முனை மின்சாரமும், 1 லட்சம் ஏக்கருக்கான 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகளும், தற்பொழுது கூடுதலாக வழங்கப்படுகிறது.

ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் மூலம் சமூக நாற்றங்கால் முறையில் அரசு உதவியோடு நாற்றங்கால் வளர்க்கப்பட்டு ஒரு மாதத்துக்கு பிறகு தண்ணீர் கிடைக்கும்போது விவசாயிகள் பிரச்சனையின்றி நெல் பயிர் செய்வதற்கு மானிய விலையில் நாற்றங்கால் வழங்கப்பட்டது என்று பழனிசாமி தெரிவித்துள்ளார். சமூக நாற்றங்கால் முறை திட்டமானது முழுமையான தோல்வி கண்ட திட்டம் ஆகும். தற்பொழுது விவசாயிகள் ஆழ்துளை குழாய் கிணறு மூலம் பெறப்படும் நீரைக்கொண்டு நேரடி நெல் விதைப்பு செய்யும் முறை மூலம் விவசாயிகள் அதிக பலனை பெறுவதால் தொடர்ந்து அது போன்று விவசாய முறை மூலம்தான் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரியும், புனரமைத்தும், சீரமைத்தும், புதிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தியும் மழை நீரை வீணாக்காமல் சேமித்து நிலத்தடி நீரை செறி ஊட்டியதால் நுண்ணீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்களை பரவலாக்கி பாசன நீரின் பயன்பாட்டினை அதிகரித்ததால் 2020-21-ம் ஆண்டில் 89 லட்சம் ஏக்கராக இருந்த பாசனபயிர் பரப்பு கடந்த 2022-23-ம் ஆண்டில் 95 லட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

தற்பொழுது, 16 மணி நேரம் வரை மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதன் மூலம், குறுவை சாகுபடி நெற்பயிர் பரப்பு கடந்த ஆட்சிகாலத்தில் இருந்தததை விட ஒன்றரை லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளது. மேலும், 2020-21ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 108 இலட்சம் மெட்ரிக் டன் ஆக இருந்த நிலையில், இந்தஅரசு செயல்படுத்திய பல்வேறு சிறப்பு முயற்சிகள், உத்திகள், சிறப்பு திட்டங்கள் போன்றவைகளால் உணவு தானிய உற்பத்தி 2023-24ஆம் ஆண்டில் 118 லட்சம் மெட்ரிக் டன் அளவில் உயர்ந்துள்ளது திமுக அரசின் இமாலய சாதனையாகும்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு ஆண்டும் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து வருகிறது. 2021-22-ம் ஆண்டில், ரூ.69.06 கோடியும், 2022-23-ம் ஆண்டில், ரூ.61.12 கோடியும், 2023-24-ம் ஆண்டில், ரூ.75.95 கோடியும் வழங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தியதன் வாயிலாக 9,46,442 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

குறுவை தொகுப்புத் திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தியதன் பயனாக கடந்த ஆட்சிக்காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவைவிட தற்பொழுது திமுக அரசு பொறுப்பேற்ற காலத்தில் 1.47 லட்சம் ஏக்கர் பரப்பளவு கூடுதலாக சாகுபடிக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மேலும், இந்த கூடுதல் பரப்பின் மூலம் நெல் உற்பத்தி சுமார் 2 இலட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்ந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டில் விவசாயிகள் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பில் இருந்து பாதுகாத்திட ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறுவை பருவம் உட்பட சம்பா, நவரை மற்றும் கோடை பருவங்களிலும் இத்திட்டம் செயல்படுத்த ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் வரும் ஜுன் 24-ம் தேதி முதல் குறுவை பருவத்துக்கான விவசாயிகள் பதிவு தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் விடியாமல் இருந்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரம், வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கையின் மூலம், தமிழக விவசாயிகள் விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.