ஜல்சக்தி இணையமைச்சராக கர்நாடக எம்.பி. நியமனம்; தமிழகத்துக்கு செய்த துரோகம்: எடப்பாடி!

மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சராக கர்நாடக எம்பியை நியமித்து இருப்பது தமிழகத்துக்கு செய்த மாபெரும் துரோகம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தமிழகத்தை ஆளும் திமுக அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் தொடர்ந்து துரோகம் செய்து வந்தன. இந்நிலையில் தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் நடுநிலையாக இருந்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சோமன்னாவை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்துக்கு செய்த மாபெரும் துரோகமாகும்.

ஏற்கெனவே, காவிரி மேகேதாட்டு பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேகேதாட்டு பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியிருப்பது டெல்டா விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை ஆளும் முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பதன் காரணம் புரியவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.