40வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை இன்று அறிவிப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தன்னை விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 21 ஆம் தேதி வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கி ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ். அல்லி, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 25 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 40வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.