கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 39 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்தவர்களில் பலர் வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று மாலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களின் நிலைகள் குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25-க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.