போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்

பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ ஐஸ் கேட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சென்னையில் தொடங்கி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தாராளமாக புழங்கிக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களின் விற்பனை குறித்தும், அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் குறித்து பலமுறை புகார் அளித்தும் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஆளும் தி.மு.க.வின் செயல்பாடுகள் எதிர்கால தலைமுறையான இளைஞர்களின் நலன் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகின்றன.

எனவே, தூத்துக்குடியில் போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணையை மேற்கொண்டு, அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்வதோடு, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.