மக்கள் பணியில் வெற்றிகொள்ள முனைந்துள்ள விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: சீமான்

காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதாக நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அப்பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி.

காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.