கள்ளச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் அண்ணாமலையின் சதி: ஆர்.எஸ்.பாரதி!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி விவகாரத்தில் அண்ணாமலை தொடர்ச்சியாக பேசி வருவதைக் குறிப்பிட்டு, அண்ணாமலையின் சதித்திட்டம் தான் இது என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 54 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மது விலக்குத்துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கூறி வருகின்றனர்.

அதே சமயம், திமுக அரசு மீது பழிபோடுவதற்காக இந்த மரணங்களுக்கு பின்னால் அரசியல் சதி இருக்கலாம் என்றும் திமுக தரப்பில் பேசப்பட்டு வருகிறது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக பேசி வருவதைக் குறிப்பிட்டு, அண்ணாமலையின் சதித்திட்டம் தான் இது என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

அண்ணாமலை ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார். அண்ணாமலையின் பேச்சுக்கும், செய்கைக்கும் தொடர்பு இல்லை. விருப்ப ஓய்வில் சென்ற எஸ்.பி மோகன்ராஜ், கள்ளச்சாராய நிகழ்வு தெரிந்துதான் சென்றதாக கூறுகிறார் அண்ணாமலை. ஆனால் அந்த எஸ்.பி.யே இன்றைக்கு ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். அதெல்லாம் பொய், நான் அப்படிப் போகவில்லை. எனது மகள் மற்றும் மருமகளுக்கு பிரசவம் பார்ப்பதற்காக விடுப்பு எடுத்து அமெரிக்காவுக்கு சென்றேன் என்று கூறியுள்ளார். இப்படி பொய் சொல்கிற மனிதனை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவர் எந்த காலத்தில் உண்மையை பேசி உள்ளார்?

இந்த சாவுக்கு காரணம் யார்? என்று ஆராய்ச்சிக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் டார்ஜிலிங்கில் ரயில் விபத்து ஏற்பட்டு அவ்வளவு பேர் செத்தார்கள். அப்போது மத்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்தாரா? நீட் தேர்வு கேள்வித் தாள்கள் எல்லாம் லீக் ஆகி உச்சநீதிமன்றம் காரி துப்புகிறதே, பல பேர் இறந்துள்ளார்களே அங்கே மத்திய அமைச்சர் ராஜினாமா செய்தாரா? நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது 137 பேர் சாராயம் குடித்து இறந்தார்களே, அப்போது அவர் ராஜினாமா செய்தாரா? ஆக வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது. கான்கிரீட்டாக சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல, ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னால் பாண்டிச்சேரியில் உள்ள முதலமைச்சர்தான் ராஜினாமா செய்ய வேண்டும். அங்கே இருந்து தான் சரக்கு வந்துள்ளது என்று காவல்துறை சொல்கிறது. பாஜகவில் உள்ளவர்கள் தன் செய்திருக்கிறார்கள். அண்ணாமலையின் சதித்திட்டம் தான் இது என்று நான் சொல்கிறேன். அவர்கள் கட்சி ஆளுகிற மாநிலத்தில் இருந்து தான் இது வந்திருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. இவர் அனுப்பி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டாரோ என்ற சந்தேகம் என்னைப் போன்றோருக்கு எழுந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.