எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கே மரியாதை தர மாட்றீங்க: ஜெயக்குமார்!

ஒரு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கே சட்டமன்றத்தில் மரியாதை தருவது கிடையாது. அவர் பேச அனுமதி கொடுப்பது கிடையாது. மீறி பேசினாலும் மைக்கை ஆஃப் பண்றாங்க. இதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கு கிடைக்கும் மரியாதையா? என்று ஜெயக்குமார் கேள்வியெழுப்பினார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 55-ஐ எட்டியிருக்கிறது. இன்னும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வருவதால் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள், ஆட்சியர் உள்ளிட்டோர் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும், இந்தக் கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் பல திமுக நிர்வாகிகள் இருப்பதாகவும், அவர்களை அரசு பாதுகாப்பதாகவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இது ஒருபுறம் இருக்க, சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 2 தினங்களாக அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன சாதாரண விஷயமா? 55 உயிர் போயிருக்கு. இன்னும் பலர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே கடந்த ஆண்டு செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் செத்து போனாங்க. அன்றைக்கு இறந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால், இன்றைக்கு கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் செல்லாதது ஏன்? நாங்க ஓடி ஒளியுற ஆள் இல்லைனு முதல்வர் சொல்றாரு. அப்படியென்றால் கள்ளக்குறிச்சிக்கு போயிருக்க வேண்டியதுதானே.

சரி அதை விடுங்க. இந்த விவகாரத்தை பற்றி சட்டமன்றத்தில் கூட பேச விட மாட்றாங்களே. ஏன் பயப்படுறீங்க? தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சினையை நாங்கள் எங்கு போய் சொல்ல முடியும்.. ஐநா சபையிலா போய் சொல்ல முடியும். சட்டமன்றத்தில்தான் சொல்ல முடியும். ஆனால் அதையும் விட மாட்றாங்க. சட்டமன்றத்தில் ஒரு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதையே இல்லை. அவரையே பேசக்கூடாதுனு சொல்றாங்க. அவர் பேசினால் மைக்கை ஆப் பண்றாங்க. இதுதான் ஜனநாயகமா?

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏதாவது சிறு பிரச்சினை இருந்தால் கூட இந்த அமீர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் எல்லாம் ஓடோடி வந்து குரல் கொடுப்பார்களே. இப்போது அவர்கள் எல்லாம் எங்கே போய் ஒளிஞ்சிட்டு இருக்காங்கனு தெரியல. இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.