மதுரையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய எச்.ராஜா மீது வழக்கு பதிவு!

தடையை மீறி பொதுமக்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி எச்.ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் என 129 பேர் மீது தல்லாகுளம் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பைக் கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் ஜூன் 22-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காவல் துறையிடம் பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனினும், திட்டமிட்டபடி கடந்த22-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். அப்போது,போலீஸாருக்கும், கட்சியினருக்குமிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்களைக் கைது செய்த போலீஸார், மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில், தடையை மீறி பொதுமக்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி எச்.ராஜா, பாஜக மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன் மற்றும் மாநில நிர்வாகிகள் என 129 பேர் மீது தல்லாகுளம் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது:-

இந்த அரசாங்கம் தீய நோக்கங்கள் கொண்ட அரசாங்கம். சாராயத்தில் என்ன நல்லச் சாராயம், கள்ளச் சாராயம்? இந்த விவகாரத்தில் முதல் மூன்று மரணங்கள் நடக்கின்றன. இது தொடர்பான அறிக்கையை முதல்வருக்கோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ தெரியாமல் மாவட்ட ஆட்சியர் கொடுத்திருப்பாரா?
183 பேர் சிகிச்சையில் உள்ளனர், 58 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி இருக்கும்போது இந்த விவகாரத்தை மறைக்க நினைக்கும் இந்த அரசாங்கத்தின் நோக்கம் பழுதானது. அதனால்தான் பாஜக சிபிஐ விசாரணை கோரியது. சிபிசிஐடியே இந்த திமுக அரசாங்கத்தின் கைக்கூலிதான். தீய நோக்கங்கள் கொண்டவர்கள்தான் இந்த அரசாங்கத்தின் கீழ் செயல்படுகிறார்கள்.

சட்டசபையில் எதிர்க்கட்சிகளை இதுகுறித்து பேச விடுவதே இல்லை. நெருப்புக் கோழி மண்ணைத் தோண்டி முகத்தை மறைத்துக் கொள்வதை போலத்தான் முதல்வர் செயல்படுகிறார். மற்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு முன்பே சிபிஐ விசாரணைக்கு முதல்வர் ஒப்புக் கொண்டால் அவரது மடியில் கனமில்லை என்று அர்த்தம்.

கமல்ஹாசன் தமிழக அரசியலில் தேவையில்லாத ஒரு நபர். முன்பு இலவசங்கள் கூடாது என டிவியை உடைத்தவர், திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று அறிவித்தவர், இப்போது டார்ச் லைட்டை தொலைத்துவிட்டு திரிகிறார். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.