தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுப்பதில் தாமதம்!

ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்தவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தால் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. அதில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்போது தமிழக அரசின் தரப்பில், “தற்போது மேட்டூர் அணையில் 12.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளிலும் 27.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. அங்கு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஜூன் 24-ம் தேதிவரை 4 அணைகளுக்கும் 7.236 டிஎம்சி நீர் வந்துள்ளது.

இந்நிலையில், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு ஜூன் 24-ம் தேதி வரை தமிழகத்துக்கு 7.352 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 24-ம்தேதி வரை 1.985 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் 5.367 டிஎம்சி நீர் நிலுவை யில் உள்ளது. இதேபோல ஜூலை மாதத்தில் கர்நாடகா 31.24 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்.
கர்நாடக அரசு முறையாக காவிரி நீரை திறந்துவிடாததால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப் பட்டுள்ளது. எனவே ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசின் தரப்பில், “கர்நாடகாவில் கடந்த ஒருமாதமாக பரவலாக‌ மழை பெய்துவருகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் போதிய அளவுக்கு நீர் நிரம்பவில்லை. தற்போது இருப்பில் உள்ள நீரைக் கொண்டே பெங்களூருவின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட இயலாது” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி ஜூன் மாதத்தில் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி நீரையும், ஜூலை மாதத்தின் 31.24 டிஎம்சி நீரையும் தமிழகத்துக்கு வழங்குவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும். இரு மாநிலங்களின் நீர் இருப்பு மற்றும் தேவை குறித்து இரு மாநில அதிகாரிகளையும் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிக்கிறேன்” எனக்கூறி, கூட்டத்தை ஒத்திவைத்தார்.

இதனிடையே தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க கர்நாடகாமறுப்பதால், காவிரி மேலாண்மை ஆணையத்தால் முடிவை எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எஸ்.கே.ஹல்தர் நேற்று இரவு 8 மணி வரை, இந்தகூட்டத்தின் முடிவை அறிவிக்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.