நெல் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும்: ஜி.கே.வாசன்!

நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த சூழலில் நெல் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேளாண் துறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழக அரசு நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டார். ஊக்கத் தொகையையும் சேர்த்து விவசாயிகளிடம் இருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2405, சன்னரக நெல் ரூ.2,450 என்றும் கொள்முதல் செய்யவும் ஆணையிட்டார். தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி 2025-26 நிதியாண்டில் சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில் கொள்முதல் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த சூழலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இயற்கைச் சீற்றம், பொருளாதாரம் இல்லாதது, உழவு கூலி, விதை நெல் விலை, நடவுக்கூலி, அறுவடைக்கூலி, உரம் போன்ற பல்வேறு காரணங்களால் நெல் விவசாயத்தில் முதலீடு செய்த பணம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. விவசாயம் மூலம் லாபம் பெறுவது எப்போது என விவசாயிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இந்த சூழலில்தான் விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் என சுட்டிக்காட்டிய வாசன், ஆனால், தமிழக அரசு, 2024-2025க்கு சாதாரண நெல்லுக்கும், சன்னரக நெல்லுக்கும் அறிவித்த ஊக்கத்தொகை போதுமானதல்ல.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,405, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 என கொள்முதல் செய்திட அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 என்ற அறிவிப்பு 3 ஆண்டுகளை கடந்து நடைமுறைக்கு வரவில்லை. அடுத்த ஆண்டு அதாவது 2025-2026 வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது காலம் கடந்த ஒன்று. ஆகவே, தமிழக அரசு நடப்பு ஆண்டிலேயே குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும்.

காரீப் கொள்முதல் பருவத்தில் நெல் குவிண்டாலுக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் தொகையை தமிழக அரசு வழங்கினால் தான் விவசாயத்தில் செய்த முதலீட்டிற்கு ஏற்ப லாபம் கிடைக்கும். ஆகவே தமிழக அரசு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000 என்பதை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.