மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா நாளை தாக்கல்: முதல்வர் ஸ்டாலின்!

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா நாளை(ஜூலை 29) தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக கோ.க.மணி எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கு, கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த சில நாள்களாகவே கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இதைத் தான் மீண்டும் உறுப்பினர் கோ.க.மணி இங்கே எடுத்துப் பேசத் தொடங்கியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை.

இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, தமிழ்நாடு மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரத்தை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.