தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு. 9 நாட்கள் நடந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம், குவைத் தீ விபத்து சம்பத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சட்டசபைக் கூட்டத்தில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வந்தது. வருவாய் துறை, தொழில் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் அந்தந்த துறை சார்பாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர்.

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம் சட்டசபையில் கடுமையாக எதிரொலித்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 4 நாட்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து கடந்த 26 ஆம் தேதி அன்று சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் 27 ஆம் தேதி முதல் இஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.

இன்று தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து உரையாற்றினார். அப்போது காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் 100 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். முன்னதாக, கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். 9 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.