மதுவிலக்கு திருத்தச் சட்டம் கொண்டு வருவது நகைச்சுவை: அண்ணாமலை

மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டு வருவேன் என்பது இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மது விலக்கு திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நாளை(இன்று) தாக்கல் செய்யப்படும் என்று முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும் என்றும் கள்ளசாராயங்களை ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை. கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு நெருக்கமான அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை. கள்ளக்குறிச்சியில் 63 பேர் இறந்தும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி நீக்கப்படவில்லை. போதைப்பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக்கிற்கு திமுகவில் உயர் பதவி தந்து வேடிக்கை பார்த்தனர். இத்தனை செய்துவிட்டு மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டு வருவேன் என்பது சிறந்த நகைச்சுவை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.