தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் தொடர்ச்சியான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதோடு, தேசிய அளவில் இந்தத் தேர்வு முறையை ரத்து செய்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர தனி நுழைவுத் தேர்வு அடிப்படையில் இருக்கக்கூடாது. இந்தத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டினுடைய கருத்தாகும்.

அந்த வகையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவும், 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, சமீபத்தில் நடந்த நீட் தேர்வின்போது நடைபெற்ற முறைகேடுகள், நீட் தேர்வுக்கெதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது. பல மாநிலங்களும் இந்தத் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு முறையை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிப்பதற்கான சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதுடன், தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை இந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். இவ்விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதேபோல் மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வினை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி நேற்று (28-6-2024) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டமன்றங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரியுள்ளார். மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

மருத்துவக் கல்வியின் எதிர்காலம் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாழ்நாள் விருப்பங்கள் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சனை குறித்து டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வரவே தாம் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீட் தேர்வின் போது நடந்த முறைகேடுகள் குறித்த சமீபத்திய பல்வேறு செய்திகள் தேசிய தேர்வு முகமையின் (NTA) பலவீனங்களை வெளிப்படுத்துகிறது.

மேலும் நீட் தேர்வை எழுதிய பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளையும் சிதறடித்துள்ளது. நீட் தேர்வை அதன் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருவதை தாங்கள் அறிவீர்கள். அனைத்து தொழிற்கல்வி படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை மேல்நிலைத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். தனி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளக் கூடாது.

நீட் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான மிக அதிகமான பயிற்சிக் கட்டணங்களை செலவிட முடியாத கிராமப்புற மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு மருத்துவக் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாலேயே நாங்கள் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்க்கிறோம். அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை வழங்கக் கோரியும் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வுகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் நீட் முறையைக் கைவிடும் வகையில், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் உரிய திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும். இந்த பிரச்சினையின் முக்கியத்துவத்தையும், தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த உங்கள் மாநில சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.