தமிழக அரசு தரமற்ற சைக்கிள்களைத் திரும்பப் பெற வேண்டும்: ப.சிதம்பரம்!

தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச சைக்கிள்கள் தரமற்றவையாக இருப்பதாகவும், அதனைத் திரும்பப் பெற்று தரமான சைக்கிள்களை வழங்குமாறும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் குறித்து விமர்சனம் வைத்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், “தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்” என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். “இந்தத் தரமில்லாத சைக்கிள்களைத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தனது பதிவில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.