மாணவியின் தோளில் கை போட விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது: சவுதாமணி!

மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க நடிகர் விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது என பாஜக நிர்வாகி சவுதாமணி கேள்வி எழுப்பியுள்ளார். பெண் குழந்தைகள் வளர்ந்துவிட்டால் தந்தை கூட தயங்கியே நிற்பார், அப்படியிருக்க விஜய் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பரிசுப் பொருட்களை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் எல்லா மாணவ, மாணவிகளையும், அவர்களுடைய பெற்றோர்களையும் தனது சகோதர சகோதரிகளாக நினைத்து விஜய் தோளில் கை போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அது போல் ஒரு மாணவி மீது கை போட்ட போது அந்த மாணவி ஏதோ சொல்ல விஜய்க்கு அது புரியவில்லை. அப்போது அந்த மாணவியே விஜய்யின் கையை தோளின் மீதிருந்து எடுத்துவிட்டு கைகளை கோர்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த நிகழ்வை விஜய் சற்று எதிர்பார்க்கவில்லை. எனினும் விஜய்யும் அதை ஃப்ரீயாகவிட்டுவிட்டு அதே புன்சிரிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

இந்த தோளில் கை போட்ட சம்பவமும் அந்த மாணவி எடுத்துவிட்டதும் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாஜக நிர்வாகி சவுதாமணி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மாணவியிடம் பாடம் கற்றுக் கொண்ட நடிகர் விஜய். மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க யார் கொடுத்த உரிமை? ஆட்டிப்படைக்கும் விளம்பர மோகம்! அப்பட்டமான விதிமீறல்! பெண் குழந்தைகள் வளர்ந்து விட்டால் தந்தை கூட தயங்கியே நிற்பார்? யார் இவர்..? இவ்வாறு சவுதாமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

சவுதாமணி சொல்வதை போல் வயதுக்கு வந்துவிட்டால் அந்த பெண்ணை அவரது தந்தையோ, அண்ணனோ தம்பியோ தொடவே கூடாது என்பதுதான் பெரியவர்கள் சொல்வது. தந்தைக்கு அவர் குழந்தையாகவே இருந்தாலும் தொட்டு பேசாதே என்றுதான் நம் பாட்டிமார்கள் கண்டித்து வந்தனர். ஆனால் இப்போது இதெல்லாம் சகஜமாகிவிட்டது. அன்பின் பால் செய்வது! அதிலும் இந்த விவகாரத்தில் தோளிலிருந்து கையை எடுக்க சொன்னாலும் அவர் கைகளை அந்த மாணவி பிடித்துக் கொண்டார். அது அன்பின் வெளிப்பாடு. இருப்பினும் தெரியாத பெண் தோள் மீது கை போடுவது தவறு தான் என்றும் ஒரு கருத்து உலவுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை தொடங்கியுள்ளார். அதற்கு அடித்தளமாக கடந்த இரு ஆண்டுகளாக நேரடியாக களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய ரசிகர் மன்றத்தினர் விஜய்யின் அறிவுறுத்தலில் பேரில் ரத்ததானம், வெள்ள நிவாரணம், உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தனர். தற்போது இரண்டாவது ஆண்டாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகர் விஜய், பரிசு வழங்கினார். காலையில் தொடங்கிய இந்த நிகழ்வு இரவு 8 மணி வரை சென்றது. சுமார் 10 மணி நேரம் சளைக்காமல் விஜய் இந்த உதவிகளை செய்து வந்தார். நடுவில் 5 நிமிடத்தில் சாப்பிட்டு வருவதாக சென்றிருந்தார். வந்தவர்களை எல்லாம் சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கூறினார். மேலும் வெளியூர்களில் இருந்து வந்த மாணவர்களை தன் சொந்த செலவில் சென்னைக்கு அழைத்து வந்திருந்தார். மாணவர்களுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் விழா நடந்த இடமான சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. விடுபட்ட மாவட்டங்களுக்கு வரும் ஜூலை 3 ஆம் தேதி நடிகர் விஜய் மீண்டும் பரிசுகளை வழங்குகிறார்.