அமைச்சர் துரைமுருகனுக்கு பிரேமலதா கண்டனம்!

டாஸ்மாக் தொடர்பாக சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனையடுத்து, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், பூரண மதுவிலக்கை தற்போது அமல்படுத்தும் சூழல் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துவிட்டார்.

அதே சமயம் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மதுபானம் தேவை என்றும், டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச் சாராயத்தை நோக்கி செல்கின்றனர் என்றும் கூறியிருந்தார்.

தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அமைச்சர் துரைமுருகன் டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று, சட்டசபையில் முதல்-அமைச்சரை வைத்துக் கொண்டே கூறுவது மிக, மிக கண்டனத்துக்குரியது. டாஸ்மாக் கடைகளில் கிக் இல்லை என்றால், அந்த அளவுக்கு தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு நடத்துகிறது. இந்த தரம் இல்லாத அரசு, தன் நிலையை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளது என்பது தான் இதற்கு அர்த்தம்.

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியை மக்களுக்கு கொடுத்து, கோடிகளை நீங்கள் சம்பாதிக்க கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றுவது ஏற்புடையதல்ல. எனவே, தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை இறப்புகளுக்கும், தற்போதைய தமிழக அரசுதான் காரணம் என்பதை அமைச்சர் துரைமுருகன் தன் வாயினால் ஒப்புக் கொண்டார். ஒரு மூத்த அமைச்சரின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.