மேற்கு வங்கத்தில் பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: தலைவர்கள் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை ஒருவர் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், பொது இடத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆண் மூங்கில் கம்பால் சரமாரியாக தாக்குகிறார். இதில் அந்தப் பெண் நிலைகுலைந்துவிட்டார். அந்த இடத்தில் இருக்கும் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்க்கின்றனர். மேலும் அந்த ஆண், தரையில் விழுந்து கிடக்கும் மற்றொரு ஆணையும் தாக்குகிறார். தாக்குதல் நடத்தியவர் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தஜேமுல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தலிபான் பாணியில் விரைவாக நீதி வழங்கும் அமைப்பாக கருதப்படும் ‘இன்சாப் சபா’ வழங்கிய உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டதே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளனர். இதுகுறித்து இஸ்லாம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இந்த சம்பவத்துக்கு பாஜக ஊடக பிரிவு தலைவர் அமித் மாளவியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது சலிம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, “மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களின் சாபக்கேடு மம்தா. மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் சந்தேஷ்காலி போன்ற சம்பவங் கள் நடக்கின்றன. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட வேண்டும்” என அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.