கோடநாடு வழக்கில் முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லை: சசிகலா

“கோடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் முதல்வர் சரியான நடவடிக்கை எடுப்பார் என எனக்கு நம்பிக்கை இல்லை” என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா இன்று (ஜூலை 3) தொண்டர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் விரைவில் தான் தொடங்க உள்ள சுற்றுப்பயணம் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 65 பேர் இதுவரை இறந்துள்ளனர். ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்று நடந்ததில்லை. அவரது ஆட்சி காலத்தில் காவல்துறை அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. ஜெயலலிதாவும் காவல்துறைக்கு நல்ல முதல்வராக இருந்தால் எந்த விஷயமாக இருந்தாலும் துறிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பார் மக்கள் பிரச்சினை என்றால் ஜெயலலிதா தூங்குவது கூட இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த அதே காவல்துறை தான் இப்போதும் உள்ளது அந்த காவல்துறை இயக்குபவர்கள் இப்போது சரியாக இல்லை. இது போன்ற அரசாங்கம் தமிழகத்தில் இதுவரை இருந்ததில்லை. இப்போது இருக்கிறது. இதை திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் இதுவரை சரிவர பொருட்கள் வழங்கப்படவில்லை. கடந்த 2 மாதமாக ரேஷன் விநியோகம் மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் 2 கோடி 21 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. 1 கோடியே 18 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 1 கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் வழங்கப்படுகிறது. இதை ஏழை, நடுத்தர மக்கள் தான் வாங்குகின்றனர். கடந்த 2 மாதமாக இவர்களுக்கு இதெல்லாம் வழங்கப்படவில்லை. தேர்தல் நடைமுறை வந்ததால் ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்ய முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் என்பது அரசுக்கு முன்னமே தெரியாதா? எதற்கு அவர்கள் அமைச்சர்களாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இது சாக்கு போக்குச் சொல்லும் விஷயம் இல்லை. இதனால் 1 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் பாதிக்கிறது. இதை எல்லாம் கேட்பதற்கு சரியான ஆள் சட்டப்பேரவையில் இல்லை. அதனால் நாம் வைத்தது தான் சட்டம் என்ற மனநிலையில் திமுகவினர் உள்ளனர். இவர்களுக்கு முடிவு கட்டுவதுதான் என்னுடைய வேலை. அதன் தொடக்கம் தான் எனது பயணம். மக்களை சந்தித்து, மக்களோடு உரையாடி பேசினால் தான் இதற்கு ஒரு முடிவு வரும்.

அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது தவறு. திமுக அரசு சரியாக செயல்படவில்லை. அதை தட்டிக்கேட்க வேண்டியவர்கள் சட்டப்பேரவைக்கு உள்ளே இருப்பது தான் நியாயம். இந்த அரசு வந்ததிலிருந்து 14, 15 வயது உடையவர்கள் எல்லாம் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். தமிழக மக்கள் 2026 தேர்தலில் நல்ல முடிவை தர வேண்டும். திமுக அரசு நடத்திவரும் கோடநாடு கொலை வழக்கு விசாரணை மீதும், அது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த பதில் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஜெயலலிதா இருந்திருந்தால் காவிரி பிரச்சினைக்கு எப்படி நிரந்தர தீர்வு கொடுத்தாரோ, அதுபோல நீட் தேர்வு விவகாரத்திலும் நிரந்தர தீர்வை பெற்றுத் தந்திருப்பார். நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம். திமுகவினர் மக்களையும் வாக்களிப்பவர்களையும் பிச்சைக்காரர்களாகத்தான் நடத்துவார்கள். நாம் ஆட்சிக்கு வந்ததும் நீட்டை ஒழிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.