விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுகவினர் பாமகவின் மாம்பழச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-

தமிழகத்தில் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும், மதுவிலக்கை அமல்படுத்தவும் மறுத்து வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகளால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளதை அறிந்த திமுக அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது. பாமக கூட்டத்திற்கு வரும் பெண்களை அடைத்து வைப்பது, உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டும் பணிகளில் திமுக அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அத்துமீறல்களை முறியடித்து பாமக வேட்பாளர் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

அதிமுகவின் நோக்கமும் பாமகவின் நோக்கமும் இத்தேர்தலில் ஒன்றாகவே உள்ளது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று கற்றுக்கொடுத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவுக்கு உண்டு. எனவே, பாமகவின் மாம்பழ சின்னத்தில் அதிமுகவினர் வாக்களிக்க வேண்டும்.

இல்லாத காரணங்களை காட்டி சாதிவாரி கணக்கெடுப்பை தட்டிக்கழிக்கும் அரசு பதவி விலகவேண்டும். விழுப்புரம் அருகே தி.குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச் சாராயம் குடித்து ஜெயராமன் இறந்துள்ளார். மேலும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது புதுச்சேரியிலிருந்து வாங்கி வந்த கள்ளச் சாராயம் என தெரியவந்துள்ளது. இதிலிருந்து கள்ளச் சாராய விற்பனையை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை என்பது தெளிவாகிறது. இதற்காக தமிழக முதல்வர் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

சாதிவாரி இடஒதுக்கீட்டால்தான் பலர் கல்வி கற்றுள்ளதாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. திமுக சமூகநீதிக்கு செய்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம். சட்டநாதன் கமிஷன் அறிக்கையை செயல்படுத்த மறுத்தவர் கலைஞர். இடைத்தேர்தலுக்கு பின் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால் மின் கட்டண உயர்வை அரசு கைவிடும்.

மாநில கல்வி கொள்கை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும். நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதால் அதை கைவிட வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்துகிறது. நீட் தேர்வை திணித்தது திமுகவும், காங்கிரஸூம் தான். அப்போது நீட் தேர்வை அறிமுகம் செய்த திமுக இன்று அதற்கு எதிராக காட்டிக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக முதல்வர் மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் உள்ள பல்கலைக்கழகம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதி இல்லாமல் உள்ளது. இப்பல்கலைகழக கட்டுப்பாட்டில் 121 கல்லூரிகள் உள்ளன. பிற கல்லூரிகளிடமிருந்து தலா ரூ.50 லட்சம் கேட்டுள்ளது காமராஜர் பல்கலைக்கழகம். தமிழக அரசு இப்பல்கலைக்கு ரூ.500 கோடி கடன் வழங்க வேண்டும். விக்கிரவாண்டியில் திமுக தோல்வி அடைந்துவிடும் என்று தெரிந்ததால்தான் முதல்வர் பிரச்சாரத்திற்கு வரவில்லை போலும். அப்படியே அவர் பிரச்சாரம் செய்தாலும் திமுக தோல்வி அடையும். நெல்லை, கோவை மேயர்கள் பதவி விலகி இருப்பதில் என்னவோ நடக்குது, ஏதோ புரியுது. இவ்வாறு அவர் கூறினார்.