தமிழகத்தில் புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை!

மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், ஆண்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆரியூர், வெங்கந்தூர், வாழப்பட்டு, சித்தாமூர் ஆகிய கிராமங்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்புரையாற்றினார். அமைச்சர்கள் கே என் நேரு, ராஜ கண்ணப்பன், எம்பிக்கள் விஷ்ணு பிரசாத், செல்வகணபதி , சுதா மாநிலத்துணைத்தலைவர்கள் குலாம் மொய்தீன், ரங்க பூபதி, மாவட்டத்தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

ஏற்கனவே 40க்கு 40 வெற்றியை கொடுத்தீர்கள். திமுகவின் நல்லாட்சிக்கு நற்சான்று வழங்கினீர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதியை முழுமையாக பயன்படுத்த சட்டம் இயற்றியவர் தமிழக முதல்வராவார். மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், ஆண்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் நம் முதல்வர். கொரோனா காலகட்டத்தில் இல்லம் தேடி கல்வி, வீடு தேடி மருத்துவ திட்டங்களை கொண்டுவந்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தது போல இத்தேர்தலிலும் வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.