அரசியல் தலைவராக விஜய் பேசிய கருத்துக்கு நான் வரவேற்பு தான் தெரிவிப்பேன்: அண்ணாமலை!

விஜயும் திமுக எடுத்து இருக்கும் கொள்கை முடிவை சார்ந்து போகிறார் என்றால் போகட்டும்.. சந்தோஷம் தான். விஜய் இன்னும் கொஞ்சம் சயிண்டிபிக்காக பார்த்து சொன்னார் என்றால், சிறப்பாக இருக்கும் என்பது எங்களுடைய கருத்து என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய், ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசியதோடு, நீட் தேர்வுக்கு எதிராகவும் பேசினார். விஜய்யின் இந்த பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பேட்டியின் போது பேசினார். அப்போது, விஜய் திமுக சார்ந்த அரசியலை முன்னெடுத்தால் தங்களுக்கு சந்தோஷம் தான் என்றும் கூறினார். அண்ணாமலை பேசியதாவது:-

நீட் தேர்வு ஆதாரம் அடிப்படையில் தான் நாங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறோம். நீட் தேர்வினால் தமிழகத்தில் இதுவரை எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்ற வெள்ளை அறிக்கையினை தமிழக அரசு வெளியிட வேண்டும். எல்லாருக்கும் ஒரு கருத்து இருக்கும். அதன்படி விஜய் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். யார் என்ன வேண்டும் என்றாலும் சொல்லிகொள்ளட்டும்.. விஜயும் திமுக சார்ந்த அரசியலை கையில் எடுக்க போகிறார் என்றால் வெல்கம்.. நோ பிராபளம். திமுக சார்ந்த அரசியலை கையில் எடுத்தால் பாஜக மட்டும் தனித்து இருக்கும். எங்களுக்கு அது சந்தோஷம்தான். ஏனெனில் எங்களுடைய இடத்தில் நாங்கள் விளையாட போகிறோம். விஜயும் திமுக எடுத்து இருக்கும் கொள்கை முடிவை சார்ந்து போகிறார் என்றால் போகட்டும்.. சந்தோஷம் தான். திமுக அங்கேயே இருக்குது சந்தோஷம்.. அதிமுகவும் அந்தப்பக்கமே போவதும் சந்தோஷம் தான். எங்களுடைய அரசியல் இன்னும் எளிமையாகிறது. ஏனென்றால் இங்கே பாருங்கள் பாஜக அரசியல் மட்டும் தனித்து இருக்கு.. அது எங்களுக்கு இன்னும் சந்தோஷம்..

அரசியல் தலைவராக விஜய் பேசிய கருத்துக்கு நான் வரவேற்பு தான் தெரிவிப்பேன். ஏனென்றால் எங்களுடைய அரசியலுக்கு அது நல்லது. பாஜக வளர்ச்சிக்கு நல்லது தான். ஆனால் சராசரியான மனிதனாக அந்த கருத்தை பார்த்தேன் என்றால் அது சரியில்லாத கருத்து என்று தான் சொல்வேன். இன்னும் கொஞ்சம் சயிண்டிபிக்காக பார்த்து சொன்னார் என்றால், சிறப்பாக இருக்கும் என்பது எங்களுடைய கருத்து. புதிய கல்விக்கொள்கை என்ன சொல்லியிருக்கிறது, குறிபாக மும்மொழி கொள்கை என்று இருக்கிறது. இதுவரைக்கும் மும்மொழி கொள்கை தான் இருந்துச்சு. இதனை திமுககாரர்கள் இல்லை என்று சொன்னால் தவறு. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு வரை இந்தி என்பது கட்டாய மொழி என்று தான் இருந்துச்சு. இதனை திமுக இல்லை என்று சொல்லலாம். ஆனால் 2020 ஆம் ஆண்டு வரை நாட்டில் இந்தி மொழி கட்டாயம் என்று தான் இருந்தது. இது தான் கல்வி கொள்கை. ஆனால் அதனை தமிழக அரசு பாலோ பண்ணாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதுதான் முதன் முதலாக புதிய கல்விக் கொள்கையில் இந்தி படித்தால் படிங்க.. இல்லையென்றால் வெறு மொழியை படியுங்கள் என்று ஆப்ஷனோடு வந்திருக்கிறது. இந்தி பிடித்தால் படிங்க.. இல்லையென்றால் மலையாளம் படிங்க.. என நாமே 3 வது மொழியை தேர்வு செய்துகொள்ளலாம்.

மோடி விஷ்வகர்மா யோஜனா கொண்டு வந்தால் அது குல கல்வி திட்டம்,. ஆனால் தமிழக கல்வி கொள்கையில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதில் மீனவர்கள் அதிகம் இருக்கக்கூடிய பள்ளியில் மாணவரின் தந்தையும், தாயும் மீனவராக இருந்தால் என்றால் அவர்களுக்கு கடற்கரை ஓரத்தில் படிப்பு சொல்லி கொடுப்பார்களாம். என்ன சொல்லி கொடுப்பார்கள் என்றால், படகை பற்றி சொல்லி கொடுப்பாங்க.. கடலை பற்றி சொல்லி கொடுப்பாங்க.. நாட்டிகல் பற்றி சொல்லி கொடுப்பாங்களாம். ஆனால் இது குல கல்வி திட்டம் இல்லை என்று சொல்கிறார்கள். மாநில அரசு பயிற்றுவித்தால் குல கல்வி இல்லை. விஸ்வர்மாவில் பயிற்சி வழங்கினால் குல கல்வி இல்லையா?.. இருமொழியை தாண்டி மக்கள் 3 வது மொழியை விரும்புகின்றனர்.

தமிழக கல்விக்கொள்கையில் உருது பள்ளிகளை அதிகமாக ஆரம்பிக்க வேண்டும். உருது டெக்ஸ்ட் புக்குகளை அதிகம் கொண்டு வர வேண்டும் என்று இருக்கிறது. இது உருது திணிப்பு இல்லையா?.. இந்தி திணிப்பு எதிர்ப்பு என்று சொல்லும் திமுக உருது திணிப்பை ஏன் எதிர்க்கவில்லை. புதிய கல்வி கொள்கையில் இருப்பதை அப்படியே திமுக அரசு கட் காப்பி பேஷ்ட் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.