இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

டி20 உலகக்கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இதன்பின் இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார்.

17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. இதன்பின் ஜூலை 1ஆம் தேதி இந்திய அணி நாடு திரும்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் பார்படாஸில் வீசிய புயல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதன்பின் புயல் ஓய்ந்த நிலையில், இந்திய அணி வீரர்களை தனி விமானம் மூலமாக பிசிசிஐ அழைத்து வந்துள்ளது. நேற்று மாலை பார்படாஸ் விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்கள் புறப்பட்டனர். இதன்பின் இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்திய அணி வீரர்களை வருவதை அறிந்த ரசிகர்கள், காலை 5.30 மணி முதலே டெல்லி விமான நிலையத்தில் குவிய தொடங்கினர். இந்திய அணி வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளி வந்த போது, ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர். இதன்பின் ஹோட்டலுக்கு சென்று தயாரான இந்திய அணி வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டனர். அப்போது இந்திய அணிக்காக உருவாக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் ஜெர்சியை இந்திய அணி வீரர்கள் அணிந்திருந்தனர்.

2 ஸ்டார்களுடன் கூடிய சாம்பியன்ஸ் ஜெர்சியை அணிந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் பிரதமரை 11 மணிக்கு சந்தித்தனர். அப்போது இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் இந்திய வீரர்களுடன் உடனிருந்தனர். தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார். 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை முதல்முறையாக வென்ற போதும் அப்போதைய பிரதமர் இந்தியா காந்தி இந்திய வீரர்களுக்கு வரவேற்பு கொடுத்து விருந்தளித்தார். அதேபோல் 2007 மற்றும் 2011ஆம் ஆண்டுகளிலும் இந்திய வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த முறை ஆசியப் போட்டிகளிலும் வென்ற போதும், இந்திய வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.