தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: சசிகலா

தமிழகத்தில் கொலை, கொள்ளை சர்வசாதாரணமாக நடக்கிறது. தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று சசிகலா கூறியுள்ளார்.

சசிகலா ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் தாதகாபட்டியை அடுத்த சஞ்சீவி ராயன் பேட்டையைச் சேர்ந்த சண்முகம் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சண்முகம் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அந்த பகுதியினர் சந்தேகிக்கின்றனர். அதேநேரம், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை குடித்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. தமிழகத்தில் தலைவிரித்து ஆடும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தையும், கள்ளச்சாராய விற்பனைகளையும் அரசு கட்டுப்படுத்த தவறினால், அதன்பிறகு தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற முடியாத வகையில் பேரபாயத்தை ஏற்படுத்திவிடும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருவதை தடுக்க, தி.மு.க. அரசு தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.