ஜெயலலிதாவின் புகைப்படத்தை பாமக பயன்படுத்த உரிமை உள்ளது: டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் படத்தை விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாமக பயன்படுத்த உரிமை உள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. திமுக சார்பாக அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு தீவிரமாக வாக்கு சேகரிக்கின்றனர். அதிமுக தேர்தலை புறக்கணித்து ஒதுங்கிக் கொண்டது. நாம் தமிழர் கட்சி சார்பாக அக்கட்சியின் வேட்பாளர் அபிநயாவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்கிறார்.

பாஜக கூட்டணி சார்பில் பாமக களமிறங்கியுள்ளது. சி.அன்புமணி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அந்த கூட்டணி சார்பாக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஐஜேகே பாரிவேந்தர், தேவநாதன், ஓபிஎஸ், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் அதிமுகவின் வாக்குகளை கைப்பற்றும் முயற்சியில் மூன்று தரப்பும் மும்முரம் காட்டுகின்றன. இதில் பாமக ஒரு படி மேலேபோய் ஜெயலிதாவின் படத்தை பேனரில் அச்சிட்டு பிரச்சாரம் செய்கிறது. இது விமர்சனத்தையும் சந்தித்தது. இந்நிலையில் நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பாமக பயன்படுத்த உரிமை உள்ளது என்று கூறியுள்ளார். ஏனெனில் பாமகவின் கூட்டணியில் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் இடம்பெற்றிருப்பதால் பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பயந்து அதிமுக ஒதுங்கி விட்டது. நானும் ஓ. பன்னீர்செல்வமும் இந்தகூட்டணியில் இருக்கிறோம். எனவே ஜெயலலிதா படத்தை பயன்படுத்த பாமகவிற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. தேர்தலில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படம் போட்டதற்கு சிலர் எதிர்கின்றனர். ஆனால் 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அப்படிப்பட்ட கட்சி வேட்பாளருக்கு ஜெயலலிதா படம் போடுவது பொருத்தமானது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நானும், ஓ.பி.எஸ்ஸும் இந்த கூட்டணியில் உள்ளோம், ஆனால் தற்போது தவறானவர்கள் கையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது. அதனை மீட்க நானும், ஓ.பி.எஸ்ஸும் தொடர்ந்து போராடி வருகிறோம்” என்று பேசினார்.