எழைகள் வாழ தகுதியற்ற இடமாக மாறும் தமிழ்நாடு: ராமதாஸ்!

கும்மிடிப்பூண்டியில் பட்டா இடத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை இடித்ததால், இளைஞர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை குறிப்பிட்டு தமிழகத்தில் ஏழைகள் வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளதாக ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். பட்டா நிலத்தில் உள்ள இவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி, அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வீட்டை இடித்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ராஜ்குமார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வீட்டிற்குள் இருந்தபடி, மண்ணெணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தவாறு வெளியே ஓடிவந்தார். அங்கிருந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தீப்பிடித்து எரிந்தவாறு ராஜ்குமார் அங்கும் இங்கும் ஓடினார். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு ராஜ்குமார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர், அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி அதிகாரிகள் இடிக்க முற்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான வீட்டு உரிமையாளர் ராஜ்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணமான அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.

அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை செல்வாக்கு மிக்க நபர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள், பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் வீட்டை இடிக்க துடிப்பது ஏன்? அவர்களை தூண்டி விட்டவர்கள் யார்? திமுக ஆட்சியில் சட்ட விரோதமாக செயல்படக்கூடிய பணக்காரர்கள் மட்டும்தான் வாழ முடியும், நேர்மையான ஏழைகள் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டு இருப்பதையே கும்மிடிப்பூண்டி நிகழ்வு காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் ஏழைகள் வாழவே முடியாது.

கும்மிடிப்பூண்டி நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர் ராஜ்குமாருக்கு தரமான மருத்துவம் அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.