சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

விரைவில் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவு தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்றும், சமூக நீதி அரசு நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வரும் 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு திமுக வேட்பாளராக இருந்த புகழேந்தி மறைவால் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் அறிவுரைப்படி சற்று ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இருப்பினும் இடைத்தேர்தலை ஒட்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரிடமும் அவ்வப்போது தொலைபேசியில் பேசி கள நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகிறார்.

இந்த சூழலில் தான் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர். 1986ஆம் ஆண்டு முதல் அன்னியூர் சிவாவை நான் பார்த்து கொண்டிருக்கிறேன். தடம் மாறாத நிறம் மாறாத கலைஞரின் உடன்பிறப்புகளில் ஒருவர். தன்னால் கழகத்திற்கு என்ன லாபம் என்று சிந்திக்கக் கூடியவர். கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இவருக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடி பலன் கிடைக்கும் வகையில் நமது அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசு என்றாலே சமூக நீதி அரசு தான். பாஜக கூட்டணியை தோற்கடிப்பதன் மூலம் சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.