பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை: அண்ணாமலை கண்டனம்!

முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இன்று(நேற்று) சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் அனைவருடனும் தமிழக பா.ஜ.க. ஆறுதலாகத் துணை நிற்கிறோம்.

நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் கடந்த 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாஜக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை. சென்னை நகரம் ‘கொலை நகரம்’ என அழைக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சத்தில் தமிழகம். தொடர் படுகொலைகள் – ரெளடிகளின் ராஜ்ஜியமாகிறது தலை நகரம் . அமைதி காக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பதவி விலகட்டும். ‘திராவிட மாடல்’ அரசு அல்ல இந்த அரசு, ‘படுகொலை’ மாடல் அரசு” என்று தெரிவித்துள்ளார்.