மின்வாரிய ஊழியர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: டிடிவி தினகரன்!

மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மின்வாரிய ஊழியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 55 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை மின்துறை ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த நிலையில் விவகாரம் தொடர்பாக தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்றும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று திட்டமிட்டபடி மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளது. இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மின்வாரிய ஊழியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மின்வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மின்வாரிய அலுவலகங்களில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பணப்பயன்களை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்வாரியத்தில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தினால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு, அடிக்கடி ஏற்படும் விபத்துகளின் மூலம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருவதாக மின்வாரிய ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் மின் தேவைக்காக இரவு, பகலாக பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வரும் நிலையில், மின்வாரிய ஊழியர்களின் மாநிலம் தழுவிய போராட்டத்தினால் பொதுமக்களுக்கு தேவையான மின்சார சேவை பாதிக்கப்படுவதோடு, மின்வாரிய அலுவலகங்களிலும் பணிகள் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மின்வாரிய ஊழியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.