ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’!

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ நினைவுபடுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரது அறிவிப்பை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ நினைவுபடுத்தும். காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட நெருக்கடி நிலை காரணமாக ஏற்பட்ட இந்திய வரலாற்றின் இருண்ட கட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக இது இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தும் உணர்வற்ற செயலைச் செய்தார். அன்றைய சர்வாதிகார அரசு லட்சக்கணக்கான மக்களை பலவந்தமாக சிறையில் அடைத்து ஜனநாயகத்தை கொன்றது. அவசரநிலையை எதிர்த்துப் போராடிய மக்கள் அனைவரையும் நினைவுகூரும் வகையில், மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது. அவசரநிலை அளித்த சித்ரவதைகள் மற்றும் நெருக்கடிகள் எனும் இருண்ட அத்தியாயத்தைப் பற்றி வரும் தலைமுறையினர் அறிந்து கெள்ள இது உதவும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நான் மனதார வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “1975 முதல் 77 வரை அவசநிலை காலம் இருந்தது. ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் பணயக் கைதிகளாகக் கைப்பற்றிய கொடூரத்தை செய்தது காங்கிரஸ். அந்தக் கொடுமைகளுக்கு லட்சக்கணக்கான ஜனநாயகப் போராளிகளுடன் நானும் ஒரு சாட்சியாக இருக்கிறேன். ஜூன் 25-ம் தேதியை ஜனநாயக படுகொலை தினமாக அனுசரிப்பது என்ற மோடி அரசின் முடிவு வரவேற்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக, நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதன்மூலம், அவர் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறை கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினம் (‘சம்விதான் ஹத்யா திவாஸ்’) ஆகக் கடைப்பிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளை சகித்த அனைவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவுகூரும்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அடக்குமுறை அரசாங்கத்தின் கைகளில் விவரிக்க முடியாத துன்புறுத்தலை எதிர்கொண்ட போதிலும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடிய லட்சக்கணக்கான மக்களின் ஆன்மாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அரசியலமைப்பு படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும் உதவும். இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், அந்த கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும். இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.