தமிழக அரசால் என் உயிருக்கு ஆபத்து: சாட்டை துரைமுருகன்!

எனது உயிருக்கு திமுக அரசால் அச்சுறுத்தல் இருக்கிறது, எனக்கு பாதுகாப்பு தேவை என நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாட்டை துரைமுருகன் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக உள்ளவர் சாட்டை துரைமுருகன். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தஞ்சை போலீஸாரால் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இனிமேல் யார் குறித்தும் அவதூறு பரப்பக் கூடாது என்ற நிபந்தனையுடன் இவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேசியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். அதிலிருந்தும் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8ஆம் தேதி முடிவடைந்தது. அப்போது இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக தலைவர்கள் குறித்தும் கருணாநிதி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, திருச்சி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் அவரை கைது செய்தனர். குற்றாலத்தில் இருந்து சாட்டை துரைமுருகன் திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையானதும் தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து சாட்டை துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:-

தொடர்ச்சியாக திமுக அரசாங்கம் என் மீது 11 வழக்குகளை போட்டு முடக்க நினைத்தது. அது போல் மீண்டும் ஒரு பொய் வழக்கை போட்டு முடக்க நினைத்தது. நீதிமன்றத்தில் எங்கள் வாதங்களை எடுத்து வைத்தோம். இது அப்பட்டமான பொய் வழக்கு. நாம் தமிழர் கட்சி தொடங்கிய இந்த 14 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்தான் அரசியல் செய்கிறோம். எனது யூடியூப் சேனல்களில் பெரும்பாலான வீடியோக்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வலிகளையும் வேதனைகளையும் பிரதிபலிப்பதாகவே இருக்கும். குறிப்பாக வேங்கைவயல், மேல்பாதி, சங்கரன்கோயில் ஜாதிய பிரச்சினை, நாங்குநேரி ஜாதிய பிரச்சினை ஆகிய பிரச்சினைகளில் அந்த சமூக மக்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறேன். ஆனால் என்னை எஸ்சி எஸ்டி எனும் சட்டத்தில் முடக்க பார்த்தார்கள்.

நான் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் பாடிய பாடல் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரங்களில் 31 ஆண்டுகளாக பாடப்பட்டு வருகிறது. சமூகவலைதளங்களில் இருக்கும் பாடல், அதை நான் மேற்கோள்காட்டி பாளையங்கோட்டை சிறை என்ற பாடல் மூலமாக திமுக தனது கட்சியை வளர்த்தது, இதை சீமான் பாடியிருக்கிறார் , இது மேற்கோள்காட்டிதான் பாடினேன். நான் எந்த ஜாதிக்கும் எதிராக பேசவில்லை, அந்த பாடலில் வரும் சொல் இழிவான சொல் என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. அந்த வார்த்தையை பயன்படுத்தி என் மீது வழக்கு போட்டார்கள். நீதிமன்றம் என்னை நேர்மையாக விசாரித்து இந்த வக்கு செல்லாது என என்னை விடுதலைச் செய்திருக்கிறார்.

பேசும் எல்லாரையும் முடக்க திமுக அரசு நினைக்கிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பார் இலானும் கெடு என்பதை போல் யாருமே பேசவே கூடாது என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை. நான் குற்றாலத்தில் பதுங்கியிருந்தேன். எனது சொந்த ஊர் வீராணம், நான் புதிதாக கார் வாங்கியிருந்ததால் காருக்கு பூஜை செய்ய அம்மன் கோயிலுக்கு சென்றிருந்தேன். குற்றாலத்தில் குளித்துவிட்டு தங்கி, காலையில் மீண்டும் ஊருக்கு செல்லும் போது வம்படியாக வந்து எனது செல்போனை போலீஸார் பறித்தார்கள். எனது புதிய காரில்தான் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். எனது காரை ஓட்டிய போலீஸ் தரப்பு ஓட்டுநர் போதையிலும் தூக்க கலக்கத்திலும் இருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வரும்போது வேண்டுமென்றே என் வாகனத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றனர். என்னை திட்டமிட்டு இந்த அரசு கொலை செய்ய பார்க்கிறது. மதுரை அருகே விளாங்குளம் சுங்கச்சாவடி பக்கத்தில் பின்னால் நின்று கொண்டிருந்த லாரி என் கார் மீது மோதியதில் என் முதுகில் காயம் ஏற்பட்டது. எனது ஓட்டுநருக்கு தலையில் அடிப்பட்டது. அரசிடம் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. நீதிமன்றம் எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். என் புதிய காரை பாருங்கள், எப்படியெல்லாம் உடைத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.