யூடியூபர் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் விடுவிப்பு!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்திருந்தனர். திருச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சாட்டை துரைமுருகனை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, விடுவிக்கப்பட்டார்.

திருநெல்வேலி வீராணம் பகுதியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன், திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் நேற்று காலை கைது செய்யப்பட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் திமுக தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழக அரசை தரக்குறைவாக பேசியதாகவும் அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் சமூக வலைதளங்களை சமீபகாலமாக சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசை விமர்சனம் செய்பவர்கள் மீதும், போதை கலாச்சாரம் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான பழக்க வழக்கங்களை சமூக வலைதளத்தில் ஊக்கப்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஐடி விங் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் சைபர் கிரைம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. மேலும் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதனைத் தொடர்ந்து, திருச்சி நீதிமன்ற முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகன் நீதிமன்ற காவலில் செல்ல தேவையில்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற காவலை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்ட நிலையில், வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன் என சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.