அண்ணாமலையும் சீமானும் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள்: வன்னி அரசு!

“தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் ஆருத்ராவும் பாஜகவும் இருக்கிறது என்பதை எமது தலைவர் எழுச்சித்தமிழர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, அண்ணாமலையும் சீமானும் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று வன்னி அரசு கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்பு உடைய திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஒரே குரலில் பேசுவதாக விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டி உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டரில் சுடப்பட்டதாகவும், மருத்துவனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு ட்வீட் செய்து உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நேரடி சம்பந்தப்பட்டுள்ள கொலையாளி திருவேங்கடம் காவல்துறை மோதலில் கொல்லப்பட்டுள்ளான். காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து அதிமுக தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களும் நாதக திரு.சீமான் அவர்களும் ஒரே மாதிரி ஒரே குரலில் கொலையாளிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். அதாவது, கொலையாளி திருவேங்கடம் நேரடியாக ஆம்ஸ்ட்ராங் அவர்களை வெட்டும் காட்சி வெளியாகியுள்ளது. அப்படி நேரடி தொடர்பில் உள்ள கொலையாளிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது, தலித் விரோதப்போக்காகும்.

தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் ஆருத்ராவும் பாஜகவும் இருக்கிறது என்பதை எமது தலைவர் எழுச்சித்தமிழர் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் சொல்லாமல், குற்றவாளிகளை பாதுகாக்கும் பணியில் ஒன்றிணைவதை தலித் இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக, அண்ணாமலையும் சீமானும் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.