மோடி தலைமையில் டைட்டானிக் கப்பல் போல கட்சி மூழ்கும்: சுப்பிரமணியன் சுவாமி!

மாநிலங்களின் 13 சட்டசபை தொகுதிகளில் பாஜக பெரும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக எனும் கட்சி டைட்டானிக் கப்பல் போல மூழ்கப் போகிறது என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கிண்டலடித்துள்ளார். சு

லோக்சபா தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளன. லோக்சபா தோல்வியைத் தொடர்ந்து 7 மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் பாஜக பெரும் தோல்வியை சந்தித்தது. 13 இடங்களில் 10 இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. 2 இடங்களில்தான் பாஜக அணி வெல்ல முடிந்தது. இது பாஜகவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாஜகவின் இந்த தோல்விகளை அக்கட்சிக்குள்ளேயே நீண்டகாலம் கலகல் குரல் எழுப்பி வரும் சுப்பிரமணியன் சுவாமி விட்டுவிடுவாரா என்ன? தமது எக்ஸ் பக்கத்தில் பாஜகவின் தோல்வியை கிண்டலடித்து பதிவிட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

அந்தப் பதிவில் சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல மூழ்குவதைப் பார்க்க வேண்டுமானால் பிரதமர் மோடியின் தலைமைதான் சிறப்புக்குரியதாக இருக்கும். 13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளானவை, பாஜக நிரந்தரமாக மூழ்கப் போவதற்கான முன் விரிசல்களை வெளிப்படுத்தி இருக்கிறது என பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இதனால் பாஜக மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.