விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: எடப்பாடி பழனிசாமி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.அதிகார பலத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

காட்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. இதனால் தான் அதிமுக போட்டியிடவில்லை. தற்போது பணபலம், அதிகார பலத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. தோல்வி பயம் காரணமாகத்தான் அதிமுக தேர்தலை புறக்கணித்ததாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய சொந்த தொகுதியான திருக்கோவிலூரில் அதிமுகவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி ஆண்டுதோறும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., அதைப் பற்றி எல்லாம் பேசுவதில்லை. குறிப்பாக தமிழக விவசாயிகளைப் பற்றியும், தமிழ்நாட்டு மக்களை பற்றியும் கவலைப்படாத அரசாக திமுக அரசு உள்ளது. கூட்டணிதான் அவர்களுக்கு முக்கியம், அதிகாரம்தான் முக்கியம். இந்தியா கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. நமக்கு ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டிய தண்ணீரைத் தான் நாம் கேட்கிறோம். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை இல்லாமல் எவ்வித குரலும் கொடுக்கவில்லை. ஆனால் நான் அறிக்கையை வெளியிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.