ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று திமுக அரசைமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழக மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அண்மையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அப்போதே உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

இந்த நிலையில், இக்கொலை வழக்கின் விசாரணைக் கைதியான குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரவுடி கொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் தலையீடு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிகிறது. எனவே, இந்த கொலை வழக்கு நேர்மையாகவும் நியாயமாகவும் நடை பெறும் வகையில் இதனை சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு உட்படுத்த வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.