தமிழக மக்களின் நலனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்கிறார்: தமிழிசை செளந்தரராஜன்!

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக மக்களின் நலனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகளே இடம்பெறவில்லை. வழக்கமாக சொல்லப்படும் திருக்குறள், புறநானூறு, ஆத்திசூடி பாடல்கள், வரிகள் கூட இடம்பெறவில்லை. அதேபோல் தமிழ்நாடு சார்பாக வைக்கப்பட்ட நிதி கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு என்று சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இதனால் பட்ஜெட் தாக்கலின் போதே தமிழ்நாடு எம்பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மைனாரிட்டி பாஜகவை ஆளும் கட்சியாக மாற்றிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை நிதிநிலை அறிக்கை தந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. 2 மிகப்பெரிய பேரிடரை சந்தித்த தமிழ்நாட்டிற்கு இதுவரை போதிய வெள்ள நிவாரணம் தரப்படவில்லை. தமிழ்நாடு குறித்து எந்த சிந்தனையும் பாஜக அரசுக்கு இல்லை என்பதையே பட்ஜெட் காட்டுகிறது. தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்களை அறிவிக்காததால் நாளை திமுக மற்றும் அதன் எம்பி-க்கள் போராட்டம் நடத்த உள்ளனர். அதேபோல் வரும் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என்று அறிவித்தார். இதனால் மற்ற மாநில முதலமைச்சர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முடிவினை தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது:-

நிதிநிலை அறிக்கையை காரணம் காட்டி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக நலனை மட்டுமல்ல தமிழக மக்களின் நலனையும் அவர் புறக்கணிக்கிறார். மத்திய அரசு அறிவித்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் தமிழக நலனும், தமிழக மக்களின் நலனும் இருக்கிறது. மேலும் தேவையானதை நேரில் சந்தித்து விவாதித்து பெற வேண்டும். ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக கூட்டத்தை புறக்கணிப்பது தமிழக மக்களின் நலனை புறக்கணிப்பதாகும். இப்படி ஒவ்வொரு வாய்ப்பிலும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு தமிழக நலனை முதலமைச்சர் புறக்கணிக்கிறார். இவர்களின் அரசியலை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.