பட்ஜெட்டில் சில அம்சங்கள் இல்லாதது துரதிருஷ்டவசமானது: சசிகலா!

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், சாமானிய மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சில அம்சங்கள் இடம்பெறாமல் போனதும் துரதிருஷ்டவசமானது என சசிகலா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மக்களின் அத்தியாவசிய தேவைகளான அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள், காய்கறிகளின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள், தனி நபர் வருமான வரி விதிப்பில் சலுகைகள், விவசாயத் தொழிலை மேம்படுத்துதல், சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கான சலுகைகள், புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், கிராமப்புற பொருளாதார மேம்பாடு தொடர்பான அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கையில் இடம் பெறுமா? என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் மத்திய அரசு 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறாததால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது சாத்தியப்படுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

மாணவர்களுக்கு உயர்கல்வி கடனுக்கான உச்சவரம்பு 10 லட்சமாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. வேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதற்கான சில திட்டங்கள் இடம்பெற்று இருப்பதும் வரவேற்கத்தக்கது. அதேபோன்று, பெண்கள், பெண் குழந்தைகள் பயன்பெற ரூபாய்.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், நாடுமுழுவதும் பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதி அமைக்கப்படும் என்ற அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. வேளாண்துறைக்கு ரூபாய் 1 லட்சத்து 52ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கதாக இருப்பினும், இன்னும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்திருந்தால் விவசாய பெருங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கும் என்பது விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது.

சாலையோர வியாபாரிகளுக்கான முத்ரா திட்டத்தின் கடன் உச்சவரம்பு 20 லட்சமாக உயர்த்தியிருப்பது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருப்பினும், இத்திட்டம் ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்கள் அனைவரையும் சென்றடைய கூடிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பழைய வருமான வரிமுறையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. புதிய வருமான வரிமுறையில் மட்டும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சமயம், வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் எந்தவிதமான மாற்றங்களும் கொண்டுவரப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக எந்தவித அறிவிப்புகளும் இடம்பெறாததும் வருத்தமளிக்கிறது. மேலும், தமிழகத்திற்கு தனிப்பட்டமுறையில் எந்தவித புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாததும் துரதிருஷ்டவசமானது. தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைத்துள்ளதால், தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் வரை குறைந்துள்ளது. அவ்வாறு தங்கத்தின் விலை என்னதான் குறைந்தாலும், அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை திமுக தலைமையிலான அரசு எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலும் கூட தொடரப்போவதில்லை. அதனை திமுகவினரிடம் எதிர்பார்ப்பதும், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற செயல் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, மொத்தத்தில் மத்திய அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்று இருந்தாலும், சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிடாத ஒரு நிதிநிலை அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.