தமிழக ரயில் திட்டங்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.6,362 கோடி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ்!

“தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 1-ல் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024-2025-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நேற்று பேட்டியளித்தார். அப்போது தமிழக ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறித்து அவர் கூறியதாவது:-

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு சராசரியாக ரூ.879 கோடி என்ற அளவில் இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒதுக்கீட்டை விட 7 மடங்கு அதிகம். தற்போது பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்ரூத் பாரத் திட்டத்தின்கீழ் 70 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்களை விரைவாக கையகப்படுத்தி கொடுத்தால் அத்திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். அந்த வகையில் தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற 2749 ஹெக்டர் நிலம் தேவை. ஆனால், வெறும் 807 ஹெக்டர் நிலம் மட்டுமே தற்போது உள்ளது.

நிலங்களை கையப்படுத்த தமிழக அரசின் ஆதரவு தேவை. தேவையான நிலங்கள் கிடைக்காததால் தமிழ்நாட்டில் ஏராளமான ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன. ரயில்வே திட்டங்களை நிறைவேற்றும்போது எந்த மாநிலத்துக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். திட்டங்களுக்கு தேவையான நிலம் கிடைக்கப்பெற்றால் தமிழகத்துக்கான நிதியை இன்னும் அதிகரிக்க முடியும். ராமேசுவரம் -தனுஷ்கோடி ரயில்வே திட்டத்தை தமிழக அரசு நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு தமிழக அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு கூட்டாட்சியில் மத்திய அரசும், மாநில அரசுகளும் நன்கு ஒத்துழைப்பு அளித்து செயல்பட வேண்டும். எனவே, ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அம்மாநில அரசுகளிடமிருந்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது.
ஒட்டுமொத்த ரயில்வே ஒதுக்கீட்டில் ரூ.1.9 லட்சம் கோடி ரயில்வே பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் பணிநியமனங்களை பொருத்தவரையில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 4 லட்சத்து 11 ஆயிரம் பணியாளர்கள் ரயில்வேயில் நியமிக்கப்பட்டனர். ஆனால், பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்து 2 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முழு பட்ஜெட் உரையில், “ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக விசாகப்பட்டினம் – சென்னை தொழில் துறை வழித்தடத்தில் உள்ள கொப்பர்த்தி முனையம் மற்றும் ஹைதராபாத் – பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தில் உள்ள ஓர்வக்கல் முனையத்தில் தண்ணீர், மின்சாரம், ரயில்வே, சாலை உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு நிதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

2024-25 மத்திய முழு பட்ஜெட் உரையில் ரயில்வே தொடர்பான ஒரே அறிவிப்பு இதுவாக மட்டுமே இருந்தது. ரயில்வே அமைச்சகம் இம்மாத இறுதிக்குள் அதன் நெட்வொர்க்கை 100 சதவீதம் மின்மயமாக்குவதையும், குறைந்தபட்சம் 2,000 கி.மீ. புதிய பாதைகள் அமைப்பதையும் இலக்காக கொண்டுள்ளது. அத்துடன் புதிய வந்தே பாரத் ரயில்களையும், விபத்துகளை தடுக்க கவாச் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களுக்கு மேலும் தாரளமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு திட்டத்துக்கான அறிவிப்பு மட்டும் வெளியானது அந்த துறைக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இதையடுத்து, ரயில் விகாஸ் நிகாம், ரயில் டெல் கார்ப்பரேஷன் தலா 6 சதவீதமும், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் 5 சதவீதமும், இர்கான் இண்டர்நேஷனல் 9 சதவீதமும், என்பிசிசி பங்கின் விலை 4 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. இந்தப் பின்னணியில் ரயில்வே அமைச்சர் மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.